Wednesday, March 7, 2012

மகளிர் தினம்...


அன்பு, ஆறுதல், அறிவு, துணை...
என் வாழ்வை அழகாக்க
அனைத்தையும் அளித்தாய்!
அம்மா,
அக்கா,
தங்கை,
தோழி
என்று பல முகங்களில்
என் உலகை நிறைக்கின்ற
பெண் என்னும் பேருண்மையே!
இந்த நாளை உனக்கு அர்ப்பணிக்கின்றேன்,
எந்த நாளும் உந்தன்
கருணை இன்றிக் கழிவதில்லை என்று....

Friday, February 17, 2012

களிமண் - ஒரு குட்டிக் கதை

யாரோ கொடுத்த ஒரு பிடிக் களிமண்ணை
ஆசையோடு வாங்கி - அதில்
தனக்குப் பிடித்த பொம்மை ஒன்றை
தானே செய்து
தனக்கே தனக்கென்று வைத்துக் கொண்டாள்
அந்தக் குழந்தை...
அதனோடு விளையாடினாள்,
அதனோடு பேசினாள்,
அதனோடு கொஞ்சினாள்,
தன் படுக்கையில் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள்,
நெடு நாட்கள்
களிமண்ணை பொம்மையாக்கின கர்வம் கொண்டிருந்தாள்.
அவளே,
வளர்ந்து
மணம் முடித்த பின்
தன் கணவனைத் திட்டும் போது சொன்னாள் இப்படி -
"களிமண்ணு மண்ட! இத ஏந்தலைல கட்டிட்டாங்க..."
என்ன சொல்ல,
களிமண்ணை பொம்மையாக்கும் கலை மறந்து விட்டாள் என்க!

Monday, May 23, 2011

சேருமிடம்!

இறந்ததில்லை!

சேருமிடம் அறிந்ததில்லை!

விட்டோடாத ஆசைகளை
அறவே அழித்ததில்லை!

பெற்றதும் இழந்ததும்
எவை எவை? தெரியவில்லை!

கட்டில் அடங்கா கனவுகளைக் கொன்று அழித்தும்
அவை சாகவில்லை!

உள்ளம் கொள்ளும் உணர்ச்சிகளின் பிறப்பிடம்
எதுவென்றே புரியவில்லை!

இந்த நொடி மறைந்து அடுத்த நொடி தோன்றுவதை
கண்களால் கண்டதில்லை!

உறவென்னும் நட்பென்னும், காதலென்னும் கட்டுக்கள்
மூளையின் எந்த மடிப்பில் பதிந்துள்ளன?
ஒன்றுமே விளங்கவில்லை!

இல்லாத கடவுள் இல்லாது போன இடத்தில்
உலகமும் இல்லாது போயிருந்தால்
இல்லாமை என்னும் வெற்றிடத்தில் அமிழ்ந்து போயிருப்பேனோ
ஆனந்தமாய்..?

Sunday, December 12, 2010

காதோரம் ஒரு ரீங்காரம்...

கொசுவுக்குப் பல் இல்லை என்று தெரிந்தும்
"கொசு கடிச்சிருச்சு! கொசு கடிச்சிருச்சு"
என்று ஊரே கூடிப் பழிசுமத்த,
அது பொறுக்காத கொசுக்கள்
ஊர் முழுக்கப் படை எடுக்க,
நேற்று இரவு
மின்சாரம் புட்டுக்கொள்ள,
காத்தாடி ஓய்ந்து நிற்க,
ஆல் அவுட்டும் தூங்கிப்போக,
நடுநிசியில் மாட்டிக்கொண்டேன்!!!

இடைவிடாது கடித்துக்
காதில் ரீங்காரம் இட்டுக் கொக்கரித்தன
பொல்லாத கொசுக்கள்!

வில்லத்தனமான ரீங்காரத்தை மொழிப்பெயர்த்ததில்...
"நான் கடிக்கிறேனா? நான் கடிக்கிறேனா?
இதுக்குப் பேரு உங்க ஊருல கடிக்கிறதா?
இன்னைக்கு உன்னோட O+ காலிடா..."


Sunday, November 28, 2010

நந்தலாலா - அணிந்துரை


ந்தலாலா ஒரு அருமையான திரைப்படம். கலைஞர்கள் முதலில் தங்கள் படைப்பைக் காசாக்கப் பாடுபடுவார்கள். பிறகு காசுக்காக கலையைப்படைக்கப் பாடுபடுவார்கள். இது கலைஞர்களின் வியாதி. இது தான் கலைப்படம், வர்த்தக ரீதியான படம் எனத் தரம் பிரிக்கச் செய்கிறது. ரசிகர்களின் ரசனையின் தரமும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளவேண்டும். மணிரத்னம் போல், 'நான் எனக்குக் கைவந்த கலையைப் படைப்பேன், ரசிப்பதும் ரசிக்காததும் தனி மனிதனின் விருப்பம்' என்னும் கலைஞர்கள் பொக்கிஷமானவர்கள். அப்படித் துணிச்சலாக எடுக்கப்பட்ட முழு நீளத் திரைப்படம் நந்தலாலா. மிஷ்கின் ஒரு உண்மையான கலைஞன்! தமிழ் இரசிகர்களின் தரம் மிளிர்ந்து இருப்பதால் 'நந்தலாலா' வர்த்தக ரீதியான கலைப்படமாக வெற்றி பெரும்.

ந்தலாலா பார்த்த பொழுது ஒரு அழகான நாவலைப் படித்த அனுபவம் ஏற்பட்டது. திரைவடிவத்தில், குறைவான வசனத்தில், நிறைவான காட்சிகளில் கதை படித்தது அற்புதமான அனுபவம். இளையராஜாவின் இசையோடு கதை படித்தது மனதில் உணர்ச்சிப் பெருக்கெடுக்க வைத்தது. ஜப்பானியத் திரைப்படமான கிகுஜிரோவின் மொழிப்பெயர்ப்பு நந்தலாலா. ஆனால் கிகுஜிரோவிற்கும் நந்தலாலாவிற்கும் திரைக்கதையில் சில குறிப்பிடத் தகுந்த வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக நந்தலாலாவின் கனமான க்ளைமாக்ஸ்.

காதல், இரத்தம், துரோகம், பாலியல், பிரம்மாண்டம் - இவையெல்லாம் காசு பண்ணும் கலைஞர்கள் கட்டிப் போராடும் கதைக் கருக்கள். காசு கொடுத்துப் படம் பார்க்கும் இரசிகர்களுக்குத்தான் அத்தனை சலிப்பும் ஏமாற்றமும். நந்தலாலா, 'அன்பை' மையமாக வைத்துக் கதை சொல்கிறது. அதுவே உண்மையான இரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கிறது.

அம்மாவைத் தேடிச் செல்லும் இருவரின் கதை என்பது நந்தலாலாவின் ஒரு வரிச் சுருக்கம். ஒருவன் அன்பால் தேடுகிறான், மற்றொருவன் கோபத்தால் தேடுகிறான் என்பது சுவாரசியம். பயணக் கதைக்குரிய வித்தியாசமான மனிதர்களின் சந்திப்பு, ஓட்டம், சிரிப்பு, அழுகை, பெருமிதம் எனக் கதை நகர்கிறது. தார்ச் சாலையின் வெப்பத்தை நாம் சுவாசிக்க முடிகிறது. ஒளிப்பதிவு பிரமாதம். அன்பின் ஏக்கத்தைக் காட்சிகள் விளக்குகின்றன. தாத்தா பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் சிறுவன் 'அகி' தன் அம்மாவைத் தேடிப் பயணிக்கிறான், மனநல மருத்துவமனையில்இருந்து வெறுப்புடன் தப்பி சாலையில் பயணிக்கிறான் பாஸ்கர் "uncle". அகி "அன்னவயல்" நோக்கிப் பயணிக்கிறான், பாஸ்கர் "தாய்வாசல்" நோக்கிப் பயணிக்கிறான். அகியும் பாஸ்கரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்கள் பணத்தைப் பறிகொடுத்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் துணை ஆகின்றனர். (இங்கு "uncle" பாஸ்கர் பறிகொடுப்பது சில்லறைகள், சிறுவன் அகி பறிகொடுப்பது சிலநூறு ரூபாய். இரசிக்க வேண்டிய முரண். இது போல் படம் நெடுக இரசனை மிகுந்த காட்சிகள் ஏராளம்). 'ஒருவருக்கு ஒருவர் துணை இங்கு, அன்பு மட்டும் அனாதையா?' என்ற கேள்விக்குப் பதில் பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களிடம். அங்கங்கு இழையோடும் நகைச்சுவை இரசிகர்களிடம் இருந்து கைதட்டல் சேர்க்கிறது. திரைக்கதை சலிப்பூட்டவில்லை. அம்மாவைத் தேடிச் சென்றவர்கள் இறுதியில் அம்மாவைக் கண்டுபிடிக்கின்றார்கள். அன்பு செலுத்துபவள், அன்புக்காக ஏங்குபவள் அம்மா என்றால், அகிக்கு 'அவள்' தான் அம்மா. தப்பை மன்னித்து ஆதரவு தந்து அரவணைப்பது அம்மா என்றால், அவளுக்கு 'அவன்' அம்மா. அன்பு வாழ்க்கையை அழகாக்குகிறது!

நந்தலாலாவைப் போற்ற வேண்டும். இது போன்ற தரமான முழு நீளத் திரைப்படங்கள் தமிழில் இன்னும் நிறைய எடுக்கப்பட வேண்டும். நம் உண்மையான இரசனையைப் பகிர்ந்து கொள்வோம் நண்பர்களே... :-)

Thursday, August 19, 2010

தொடர்பு எல்லைக்கு அப்பால்

மனம் மகிழ்ந்து உலவும்
தெருவின் வழியே செல்லும்போது
வியந்து வியந்து கேட்டுக்கொள்வதுண்டு -
பட்டாம்பூச்சிகள் ஏன்
செல்போன் பேசிக்கொண்டே
பறப்பதில்லை?

Wednesday, August 18, 2010

மழை எப்போது அழகாகின்றது?

மழையில் நடப்பதோர் வரம்!
'மழை எப்போது அழகாகின்றது?' - என்று
மனதோடு அலசிக்கொண்டே நடப்பது அனுபவம்!

மழை அழகு,
நனைந்து சிலிர்த்து நிற்கும்
மரங்களை மீண்டும் மீண்டும்
நனைக்கும் போது!

மழை அழகு,
தேங்கி நிற்கும் நீரில் மிதக்கும்
கத்திக்கப்பலில் துளித்துளியாய் ஏறி
மிதக்கும் போது!

மழை அழகு,
காற்றைக் கொண்டு
என் குடையை விசிறியெறிந்து
என்னை நனைக்கும் போது!

மழை அழகு,
பள்ளிச் சிறுமிகளின்
மழைக்கோட்டில் விழுந்து சறுக்கிச் சென்று
அவர்களின் கை நனைக்கும் போது!

மழை அழகு,
சாலையோர மலர்களின்
நறுமணத்தைக் களவாடி
துளிகளோடு காற்றில் தூவும் போது!

....

Thursday, August 12, 2010

நிலவோடு பயணம்

நின்றால் நிற்கும்
நடந்தால் பின்தொடரும்
நிலவைப் போன்ற
உன் நினைவுகளோடு
பயணிக்கிறேன் கண்ணே,
ஒரு சிறுவனை போல்!

Wednesday, May 19, 2010

மழைக்காற்றில் பட்டாம்பூச்சி...

பட்டாம்பூச்சி தன் சிறகால்
மெலிதாய் என் முகம் அறைந்து சென்றது
மழைக்காற்றில் சிறகடித்து
என் முகம் அறைந்த அவள் துப்பட்டா...

சிந்தும் அன்பு மழை

நடு இரவைத் தாண்டி வானில் பேய் இடி ...
அய்யோ! அவள் பயந்து போவாளே
என்று பதறிப்போய் அழைத்தேன்
செல்போனில் சிந்தியது அன்பு மழை!