Sunday, November 29, 2009

யோகி aka Tsotsi!!!

யோகியான Tsotsi யைப் படிக்க இங்கே சுட்டவும் : http://www.tsotsi.com/english/index.php?m1=film

தமிழில் தரமான நல்ல கதைகளுக்குப் பஞ்சமில்லை. அவற்றைத் திறம்படப் படமாக்க தயாரிப்பளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தான் பஞ்சம். எல்லாம் வெற்றியின் மேல் இருக்கும் பயம். இங்கே வெற்றி எனப்படுவது முதலீடு செய்த பணத்திற்கு இலாபம் பார்ப்பது அல்லது image எனப்படும் புகழின் மாயப்பிடியைத் தக்க வைத்துக் கொள்வது!!!

இதில் இளிச்சவாயன்கள் யாரென்றால் நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்கள்!

பணம் தான் பிரச்னைன்னா தலை சிறந்த இயக்குனர்கள்னு பட்டம் வாங்குனவங்க எல்லாம் கலைக்காக வருஷத்துக்கு நூறு குறும்படங்களையோ குறைந்த Budget படங்களையோ எடுத்து வியாபாரம் பண்ணிப் பாருங்க. வேற்று மொழிப்படங்களோட கதையைத் தழுவி (எங்கள் பார்வையில் 'திருடி') படம் எடுக்கறீங்களே, அதே போல அவங்களோட வியாபார தந்திரத்தையும் (எ.கா., Paranoid Series) தழுவி அல்லது திருடியாவது தரமான திரைப்படங்களைக் கொடுத்து எங்களைத் தமிழ்த் திரைப்பட இரசிகர்களாய் பெருமை படச் செய்யுங்களேன்!

இதுவரை கண்டெடுத்த கண்கள்!

'கண்கள் இரண்டொழிய வேறில்லை' என நினைத்து
ஏமாந்து இருந்தேன்.

கனவுகள் கொடுத்து
என் மனக்கண்ணைத் திறந்து வைத்தாய்,

அந்தக் கனவுகளை அழிக்கும்
சூத்திரம் கற்றுக் கொடுத்து
அறிவுக்கண்ணையும் திறந்து வைத்தாய்!

இன்னமும் எத்தனை கண்கள் உள்ளதென
ஆச்சர்யப்பட்டு அதிர்ச்சியில் கிடக்கிறேன் நான்!

இன்றும் கழிகிறது

நேற்றைய நிகழ்வுகளையும்
நாளைய கனவுகளையும்
மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக் களைத்துப் போகிறேன்.

மதியவேளைப் பட்டினியில்
புரண்டு படுத்துக் கண்மூடும் போது சொல்லிக்கொள்கிறேன்
'நாளை நலமாய் இருக்கும்' என்று!

Thursday, November 19, 2009

WOW!!!

இந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் ஆறாம் அறிவு!!! தெளிவாய்ச் சொல்லப் போனால், இது கணினியை நம் உடலில், உயிரில் புகுத்தும் முயற்சி...

Tuesday, November 10, 2009

மகிழ்ச்சி

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- உன்னோடு சேர்ந்து சிரித்த போது
நான் உலகுக்குச் சொன்னது!

கனவுகளைத் துரத்தியவன்!!!

இதுவரையில்
என் கனவுகளையெல்லாம்
மலையுச்சிக்கு அழைத்துச்சென்று
கீழே தள்ளிக் கொன்று கொண்டிருந்தேன்!

நேற்று வந்த ஒரு கனவு
தள்ளிவிடும் தருணத்தில் தள்ளி நின்று
என்னை விழவைத்துவிட்டது
பள்ளத்தாக்கினுள்!

இன்னமும் சாகாமல்
மீளாமல்
உயிர்பிழைத்துக் கொண்டிருக்கின்றேன்
என் இன்னபிற கனவுகள் விழுந்து இறந்த
பள்ளத்தில்!

Friday, September 25, 2009

விட்டுப் பிரிந்த கூடு


நாற்காலி,
காலி பென்ச்,
கோவில் சத்திரம்,
மண்டபத்தின் கட்டாந்தரை,
இரயில் அல்லது பேருந்து இருக்கை,
நடைபாதை,
விடுதி
எந்த இடத்திலும் கிடைக்கும்
தூக்கம்.

குடிக்க ஹார்லிக்ஸா? பாலா?
எனக் கேட்கும்
அம்மாவின் பாசம்
எல்லா இடங்களிலும்
கிடைப்பதில்லை!

Thursday, September 24, 2009

நதி ஊறும் நிலவு


நதியில் மிதக்கும் நிலவு!
என் கைகளில் அள்ளுகின்றேன்,
இப்போது -
என் கைகளில் நிலவு!
வானில் வீசித் தெளிக்கின்றேன்,
இப்போது -
வானில் நிலவு!
குனிந்து நதியைப் பார்க்கிறேன்
மீண்டும்
நதியில் நிலவு!

Friday, July 31, 2009

மழை ஓய்ந்த அகால வேளை


சிறகு கனத்த பட்டாம்பூச்சிகள்
இலைகளுக்குக் கீழே பதுங்கியிருக்க,
ஈசல்பூச்சிகளுக்குக் கொண்டாட்ட வானம்!!!

Saturday, July 18, 2009

காணாமல் போனவர்கள்..!


ஆச்சர்யப்பட்டேன்!
யார் காணாமல் போனாலும்
அறிவிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டு...

பக்கத்துத் தெரு
கோவிந்து மாமா காணாமல் போனபோதுகூட
அறிவித்திற்று!

தெருவே அதை
அரிதாகவும் பரபரப்பாகவும்
பேசிக்கொண்ட போது
அம்மாவிடம் கேட்டேன்,
'காணாம போன என்னோட சிலேட்ட ஏம்மா
காட்டமாட்டேங்குது?'

அம்மா சொன்னாள்,
'மனுசங்க காணாமப் போனா மட்டுந்தான்டா
சொல்லும்'.

ஆர்வம் பொங்கிய
நாள் ஒன்றில்
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக்குச்
சற்று முன்
கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டேன்!

கற்பனையில்
கேட்டு ரசித்தேன்,
'காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...
பெயர், கிர்பால்...
வயது, ஆறு...
காணாமல் போன போது
பச்சை நிற சட்டையும்
அரை டிரவுசரும் அணிந்திருந்தான்!'

புன்னகைத்தபடியே
காதைத் தீட்டி வைத்தேன்!

அறிவிப்பும் முடிந்தது
என் பெயரும் அறிவிக்கப்படவில்லை!

வெளியே எழுந்து சென்று
தொலைக்காட்சிப் பெட்டியைக்
கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தேன்!

எனைக் கண்டு
அம்மா கேட்டாள்,
'இத்தன நேரம் எங்கடா கண்ணு போயிருந்த?'

உள்ளிருந்து விம்மியபடியே
கண்ணீர் விட்டு அழத்தொடங்கியிருந்தேன்!

Wednesday, July 8, 2009

மென்மையாகிப் போனவர்கள்...

கடவுளர் காணாமல் போகின்ற
பொன்மாலை வேளை!
ஓர் பட்டாம்பூச்சி வருவதைப் பார்க்காமல்
மலர்ச்சாலை ஒன்றைக் கடக்க முயன்றேன்!

என்னைக் கண்டு திடுக்கென்று திரும்பிய பட்டாம்பூச்சி
ரோஜாப்பூவில் மோதி விழுந்தது!

அச்சத்தில் நின்ற என்னை,
'பார்த்து வரக்கூடாதா? மோதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் உனக்கு?'
என்றது அன்போடு.

மன்னிப்பு கேட்டு நின்ற என்னிடம்,

(பட்டாம்பூச்சி) 'எங்கே அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கிறாய்?'
(நான்) 'என் தேவதையைத் தொலைத்து விட்டுத் தேடுகிறேன்'

சற்றே கோபமாகிய பட்டாம்பூச்சி,
'எத்தன பேர்றா இப்படிக் கெளம்பி இருக்கீங்க? வூட்ல சொல்ட்டு வன்டியா?' -
என்று திட்டிக்கொண்டே பறந்துவிட்டது!

Wednesday, June 24, 2009

சிறு தேவதையின் உலகம்...



வானம் கொண்ட நீலம் உண்டு
கடல்கள் உமிழ்கின்றன நிறங்கள் என்று
இராமன் அன்று சொன்னான்!

என்றும்
வானம் கொள்ளும் வண்ணங்கள் யாவும்
இரு சின்னக் கைகளின் மந்திரக் கட்டளையாலோ?!

சின்னக் கால்களின் சிறு துள்ளல்கள் கண்டு
மேகக் கூட்டங்கள் கன்னம் சிவப்பதும் உண்டோ?!