Tuesday, March 25, 2008

மரம்

சாலையோரத்தில் நிற்கும் மரங்களெல்லாம்
எங்கோ பார்த்ததுபோலவே தோன்றும்.

'அசோகர் சாலையோரங்களில்
மரங்களை நட்டார்'.

தினசரியின் டெண்டர் அறிவிப்பில்
சாலையோர மரங்களை வெட்ட
விடப்பட்ட டெண்டரின் கீழே
நவீன நிழற்குடை அமைக்க டெண்டர்.
தார்ச்சாலை போட டெண்டர் என்றோ விடப்பட்டு விட்டது.

கதாநாயகன், கதாநாயகி மற்றும் குழுவினர்
பனிமழையிலும் பளபளக்கும் வெளிநாட்டுச் சாலைகளிலும்
குதித்துக் குதித்து பாடி ஆடுகிறார்கள்.

கிராமத்துக்கு வரும் நகரத்துப் பறவைகளை
எளிதில் கண்டு பிடித்து விடலாம் -
புளியமரச் சாலையை ஒட்டிச்செல்லும்
மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும்!

பல நகரத்துப் பள்ளிகளிலும்
குடியிருப்புகளிலும்
மரம் நடுவிழா கொண்டாடப்படுகின்றது.
சத்தமே இல்லாமல்
வயல்நிலங்களெல்லாம்
குறைந்த விலையில்
வீட்டுமனைகள் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

நான் முதன்முதல் கட்டும் வீட்டின்
முகப்பில் இடம் விட்டு
மரம் நடுவேன்.

பாடத்திட்டம் மாறாமல் இருந்தால்
என் குழந்தைகளும் கற்பர்
'அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்'.


மரங்களைப் பற்றி எஸ். இராமகிருஷ்ணனின் சுவாரஸ்யமான கட்டுரை இங்கே...

Wednesday, March 19, 2008

நிரைநேர் - மனது; நேர்நிரை - காகிதம்

தென்கிழக்கில் எழும்பி
வடமேற்கில் திரும்பி
கிழக்கு..
வடக்கு..
மேற்கு..
என்றவாறு திசைதோறும் சுற்றித் திரிந்து,
ஓடும் வாகனங்களைப் பின்னால் துரத்தி ஓடி,
அலைந்து, நெளிந்து, சுருண்டு,
காற்றில் மிதந்து,
சாலையில் சீறிவரும்
பேருந்தின் சக்கரங்களின் இடையில் பாய்ந்து,
அடியில் பதுங்கி,
சக்கரத்தில் சிக்கிச் சாகாமல்
பின்வழியே வெளியேறி
செருக்குடன் பறந்து வரும்!
பின்னால் வரும் இருசக்கர வாகனம்
தன் முன்சக்கரத்தில் பிடித்திழுத்து
சாலையின் மேல் சாத்தும்!
சில நொடிகள் திடுக்கிட்டு அசையாதிருந்து
மீண்டும்
தென்கிழக்கில் எழும்பி,
வடமேற்கில் திரும்பி...

Sunday, March 16, 2008

தூரங்கள் கடந்தும் அவள் அன்பு!

மாத வட்டி கட்டியது
அக்காவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது
அப்பாவின் உடல்நல விசாரிப்பு
என
தொலைபேசியில் எல்லாம் பேசி முடித்தபின்
மறுமுனையில்
என்றும்போல் மறக்காமல் கேட்பாள்,
'சாப்பிட்டியா?'
-அவள் என் அம்மா!

Wednesday, March 12, 2008

நான் என்றும் நானாக




வாழ்க்கை,
சில நேரம் இனிக்கின்றது
சில நேரம் கசக்கின்றது
சில நேரங்களில் மகிழ்ச்சியாய்
சில நேரங்களில் துன்பமாய்
இருப்பினும் என்றும் நான்
என் பாதையோரப் பூக்களைக் கண்டு
சின்னஞ்சிறு புன்முறுவல் பூக்கிறேன்!

மின்னும் நட்சத்திரங்களை
விரலால் தொட்டு எண்ணுகிறேன்!

கனவுகளில்
வானிலிருந்து கீழே விழுகிறேன்!

தேவதைகள் துரத்த
ஒளிந்து விளையாடுகிறேன்!

தூக்கிச் செல்வோர் முதுகின்மேல் எட்டிப்பார்க்கும்
பெயர் தெரியாத மழலைகளுக்கு
வாய் சுழித்து கண் சிமிட்டி
தெய்வப்புன்னகை தரிசிக்கிறேன்!

பேருந்தின் ஜன்னல் வழியே
உலகைப் புரட்டிப் படிக்கிறேன்!

இந்த உலகம் எனக்கும் சொந்தம் என்று
என்றும் நான்
நானாக வாழ்கின்றேன்!

Tuesday, March 11, 2008

சூரியன் நிலவு

நாம் இருவரும்
அதிசயமாய் பேசி மகிழ்வதைக் கண்டு
சூரியன் கன்னம் சிவந்து
தொடுவானத்தில் மெதுவாய் மறைகிறான்.
மறுபுறம் வெண்ணிலவு நம்மைப் பார்த்து புன்னகைக்கிறாள்!
நாம் பேசிக் கொண்டே இருக்கின்றோம்.