Sunday, January 14, 2024

தை பிறந்தால் வழி பிறக்கும்

முன்பனிக்காலத்தின்
இதமான தை!

இம்மண்ணில் பிறந்த உயிர்கள் உண்ண
அறுவடை தந்த தை!

பசிப்பிணி நீங்கிய தை!

உழவைப் போற்றிய தை!

வளங்கள் சேர்த்த தை!

உளங்கள் உவந்த தை!

ஒவ்வொரு ஆண்டும் பிறப்பாள்,
புது வழிகள் திறப்பாள்...

இன்பம்,
புகழ்,
செல்வம்,
ஞானம்,
பண்பு,
அறம் சிறந்து
பொங்கட்டும் நம் வாழ்வில்...

Tuesday, January 9, 2024

பயணங்கள் முடிவதில்லை

கட்டணமின்றி பயணிக்கின்றோம்,

சுற்றிச் சுற்றி ஒரே தடத்தில்.


சேருமிடம் தெரியாமலே 

பல ஆயிரம் மைல்கள் 

கடந்து விட்டோம்...


செல்லும் வேகம் குறைவதை 

எவருமே அறிவதில்லை,


அறியா வண்ணம் 

வேகம் குறைந்தாலும்,

இந்த பூமி நிற்கப்போவது இல்லை!


பயணிகள் மட்டும் 

ஓரிடம் ஏறி, 

ஓரிடம் இறங்குகின்றோம்...


பயணங்கள் முடிவதில்லை!

Saturday, June 24, 2023

காணாமல் போன இரவு...

நேற்று இரவு கண்ட கனவில், 

உச்சி வெயிலில்

வெண்மணலில் ஓடுகின்றேன்...

ஒற்றைப் பனைமரத்தின் நிழலில் நின்று

உச்சியில் இருக்கும் காக்கையை நோக்கி கை நீட்டுகின்றேன்...

ஒரு பெரிய சுழல் வந்து பனைமரத்தை தூக்கிச் சென்றது...

காகம் பட்டாம்பூச்சியாக உருமாறி பறந்து சென்றது...

வெயில் என் கன்னத்தில் ஏறியது...

சட்டென்று விழித்துப் பார்க்கையில்,

மின்தடையால் மின்விசிறி கிரீச்சிட்டு கொண்டே சுற்றி நின்றது!

Thursday, June 1, 2023

இரக்கம்

சொரி பிடித்து

கேட்பாரற்றுத் திரியும்

தெருநாய்களைக் கண்டு

இரக்கம் கொள்கிறோம்,

தனியாக மாட்டிக்கொண்ட 

பூனைக்குட்டியை 

அவை கடித்துக் குதறும் போது?


நாய்களிடம் மாட்டி

இறந்து போன 

பூனைக்குட்டிகளைக் கண்டு 

இரக்கம் கொள்கிறோம்,

சிறு குருவியைப் 

பிடித்துப் பிய்த்து

அவை தின்னும் போது?


எளியவரைத்

துன்புறுத்தாது 

அன்பு செய்தல் அறமாம்!


இரக்கம் காட்டுவதையும் 

தண்டிப்பதையும் 

கடவுள் பார்த்துக் கொள்வார்!

Sunday, May 7, 2023

கற்றவை

பரீட்சைக்காக நினைவேற்றிக் கொண்டவை 

ஆண்டு முடிந்தவுடன்

சவுகரியமாக மறந்து போனதில் மகிழ்ச்சி, 

என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த 

சிந்தனைகள் மட்டுமே 

இன்று என் வழித்துணையாக!

Friday, February 3, 2023

வாழ்!

இவ்வளவு வேகமாய் எங்கே போகிறோம்?

நின்று நிதானித்து

வாழ்க்கையை ரசித்த நாட்கள் 

வெகு தொலைவில் ஓடி விடவில்லை!

இன்று என் கட்டை விரலும் ஓடுகின்றது

கைப்பேசி தொடுதிரையின் மேல்!

Sunday, July 17, 2022

காணாமல் போனவர்கள்..!

"காணாமல் போக வேண்டும்" என்றால்

தேடி,

கண்டு,

மகிழ்ந்து,

உறவாட

ஒருவராவது வேண்டும்!



Tuesday, April 19, 2022

கங்காரு குட்டி



குட்டியைச் 

சுமந்து நிற்கும் 

கங்காரு,

மின் விசிறியைச் சுமந்து

நிற்கும் மரம்!

இடம்: சென்னை தியாகராய நகர் G.N செட்டி சாலை

Thursday, June 24, 2021

அமராவதி என் கண்ணம்மா!

 என் உயிர்த்துளியின் ஒரு துளியே,

என் கண்மணியே,

பிறக்காமலே இறந்த என் மகளே!

கருவறையின் வாசல் வரை வந்து

விண்ணிற்குச் சென்றாய் ஏனடி?


என்னைப் போல் இருந்தாய் என்று

உன் தாத்தா பாட்டி சொன்னார்கள்,

என் கண்களைக் கொண்டிருந்தாயோடி 

என் செல்லமே?


முதன்முதல் "அம்மா" என்று சொல்லலாமா,

"அப்பா" என்று சொல்லலாமா என்று யோசித்து வைத்திருந்தாயோ?


உன் அம்மாவின் செவி வழியே

என் குரலை நீ கேட்டிருந்தாயோடி?

உன்னை "சக்கரைக்கட்டி", என்று நாங்கள் செல்லம் கொஞ்சியதைக் கேட்டு மகிழ்ந்து இருந்தாயோ?


உயிரோடு உயிராக

அம்மா உன்னை வயிற்றில் வளர்க்க,

நான் உன்னை என் மனதில் வளர்க்க,

எங்களிடம் இருந்து

உன்னை

எது வந்து கொண்டு போனதடி கண்ணம்மா???

Thursday, April 29, 2021

வழி - வேட்கை

அறம் போற்றும் 

மதங்கள் அனைத்தும் 

வழித்தொடர்வேன்,

மனிதம் காக்கும் கடவுளரைத்

தொழுவேன் என்றும்,

ஆனால்,

எனக்கு எப்பொழுதும் எந்த மதமும் 

பிடிப்பதில்லை,

மதம் பிடித்தால்

மனிதனும் மிருகம் 

அன்றோ!