Thursday, June 24, 2021

அமராவதி என் கண்ணம்மா!

 என் உயிர்த்துளியின் ஒரு துளியே,

என் கண்மணியே,

பிறக்காமலே இறந்த என் மகளே!

கருவறையின் வாசல் வரை வந்து

விண்ணிற்குச் சென்றாய் ஏனடி?


என்னைப் போல் இருந்தாய் என்று

உன் தாத்தா பாட்டி சொன்னார்கள்,

என் கண்களைக் கொண்டிருந்தாயோடி 

என் செல்லமே?


முதன்முதல் "அம்மா" என்று சொல்லலாமா,

"அப்பா" என்று சொல்லலாமா என்று யோசித்து வைத்திருந்தாயோ?


உன் அம்மாவின் செவி வழியே

என் குரலை நீ கேட்டிருந்தாயோடி?

உன்னை "சக்கரைக்கட்டி", என்று நாங்கள் செல்லம் கொஞ்சியதைக் கேட்டு மகிழ்ந்து இருந்தாயோ?


உயிரோடு உயிராக

அம்மா உன்னை வயிற்றில் வளர்க்க,

நான் உன்னை என் மனதில் வளர்க்க,

எங்களிடம் இருந்து

உன்னை

எது வந்து கொண்டு போனதடி கண்ணம்மா???