
வாழ்க்கை,
சில நேரம் இனிக்கின்றது
சில நேரம் கசக்கின்றது
சில நேரங்களில் மகிழ்ச்சியாய்
சில நேரங்களில் துன்பமாய்
இருப்பினும் என்றும் நான்
என் பாதையோரப் பூக்களைக் கண்டு
சின்னஞ்சிறு புன்முறுவல் பூக்கிறேன்!
மின்னும் நட்சத்திரங்களை
விரலால் தொட்டு எண்ணுகிறேன்!
கனவுகளில்
வானிலிருந்து கீழே விழுகிறேன்!
தேவதைகள் துரத்த
ஒளிந்து விளையாடுகிறேன்!
தூக்கிச் செல்வோர் முதுகின்மேல் எட்டிப்பார்க்கும்
பெயர் தெரியாத மழலைகளுக்கு
வாய் சுழித்து கண் சிமிட்டி
தெய்வப்புன்னகை தரிசிக்கிறேன்!
பேருந்தின் ஜன்னல் வழியே
உலகைப் புரட்டிப் படிக்கிறேன்!
இந்த உலகம் எனக்கும் சொந்தம் என்று
என்றும் நான்
நானாக வாழ்கின்றேன்!