Tuesday, March 25, 2008

மரம்

சாலையோரத்தில் நிற்கும் மரங்களெல்லாம்
எங்கோ பார்த்ததுபோலவே தோன்றும்.

'அசோகர் சாலையோரங்களில்
மரங்களை நட்டார்'.

தினசரியின் டெண்டர் அறிவிப்பில்
சாலையோர மரங்களை வெட்ட
விடப்பட்ட டெண்டரின் கீழே
நவீன நிழற்குடை அமைக்க டெண்டர்.
தார்ச்சாலை போட டெண்டர் என்றோ விடப்பட்டு விட்டது.

கதாநாயகன், கதாநாயகி மற்றும் குழுவினர்
பனிமழையிலும் பளபளக்கும் வெளிநாட்டுச் சாலைகளிலும்
குதித்துக் குதித்து பாடி ஆடுகிறார்கள்.

கிராமத்துக்கு வரும் நகரத்துப் பறவைகளை
எளிதில் கண்டு பிடித்து விடலாம் -
புளியமரச் சாலையை ஒட்டிச்செல்லும்
மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும்!

பல நகரத்துப் பள்ளிகளிலும்
குடியிருப்புகளிலும்
மரம் நடுவிழா கொண்டாடப்படுகின்றது.
சத்தமே இல்லாமல்
வயல்நிலங்களெல்லாம்
குறைந்த விலையில்
வீட்டுமனைகள் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

நான் முதன்முதல் கட்டும் வீட்டின்
முகப்பில் இடம் விட்டு
மரம் நடுவேன்.

பாடத்திட்டம் மாறாமல் இருந்தால்
என் குழந்தைகளும் கற்பர்
'அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்'.


மரங்களைப் பற்றி எஸ். இராமகிருஷ்ணனின் சுவாரஸ்யமான கட்டுரை இங்கே...

1 comment:

sen said...

global warming naana kavingar eppadi explain paanararu addadee....

so i reaquest everone to plant a tree....to save our world..